தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

நாகர்கோவில்:தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் தினகரன் தலைமையில் அதன் நிர்வாகிகள் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதா வது:
தமிழ்நாட்டில் தற் போது நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப் படுகிறது. இதனால் மாணவ மாணவியர் சிறு வியாபாரிகள், மின்சாரத்தை நம்பி தொழில் செய்பவர்கள், விவசாயிகள், நோயாளிகள் உட்பட அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் தற்போது தமிழக அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் கிரைண் டர், மிக்சி, மின்விசிறி ஆகியவற்றை மின்சார தடையால் இயக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இப்போது நடைபெறும் மின்சார தடையால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
எனவே போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரவும், மின்சார தடையை போக்கவும் தமிழக அரசு இலவசமாக வழங்கி வரும் கிரைண்டர், மிக்சி, மின்விசிறி ஆகியவற்றை தவிர்த்து எல்லா குடும்ப அட்டைதாரருக்கும் இலவசமாக இன்வெட்டர் கருவி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச பொருட்களை தவிர்த்து இன்வெட்டர் வழங்க வேண்டும் 

தமிழ்த்தேசத்தில் சேரித்தமிழர்களின் நிலை!

2011 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட336 வன்கொடுமைகளில் படுகொலைகள் மட்டும் 44 கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 50 சதவிகிதம் அதிகம்  கொலை வழக்கில் 3.9 சதவிகிதம் மட்டுமே தண்டனை!
தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டில் 204 நேரடி கள ஆய்வு உட்பட, 336 வன்கொடுமை நிகழ்வுகளில் மதுரையில் உள்ள "எவிடன்ஸ்' அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது. இவ்வாய்வில், 2011 ஆம் ஆண்டில்  மட்டும் 44 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது; இதில் 18 பேர் பெண்கள் (ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படாத பல வன்கொடுமை நிகழ்வுகளில் மேலும் சில படுகொலைகள் நிகழ்ந்திருக்கலாம்). அதுமட்டுமின்றி, துப்பாக்கிச் சூடு மற்றும் காவல் நிலையங்களில் 10 த­லித்துகள் கொல்லப்பட்டுள்ளனர். கொலையா? தற்கொலையா? விபத்தா? என்று கண்டறிய முடியாமல் 24 த­லித்துகளின் மரணம் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளன.
சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்ட 44 தலித்துகளில்  மதுரையைச் சேர்ந்த ராஜலட்சுமி (4), சிவகங்கையைச் சேர்ந்த செல்வப்பிரியா (11), தூத்துக்குடியைச் சேர்ந்த அற்புதா (16), திண்டுக்கல்லைச் சேர்ந்த காளிஸ்வரி (6) உள்ளிட்ட 18 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 19 வயதி­லிருந்து 30 வயதிற்குள் கொல்லப்பட்ட த­லித்துகளின் எண்ணிக்கை 11. கடந்த 10 ஆண்டுகளில் 2011 இல் அதிகமான தலித் படுகொலைகள் நடந்திருப்பது இவ்வாய்வின் மூலம் தெரிய வருகிறது.
cov_370இதனை கடந்த ஆண்டுகளில் நடந்த படுகொலைகளின் அடிப்படையில் ஒப்பீடு செய்யலாம். கடந்த 2010 ஆம் ஆண்டு 1633 த­லித்துகள் மீதான வன்கொடுமைகளில் 22 (சனவரி – செப்டம்பர் 2010 வரை) படுகொலைகளும், 2009 ஆம் ஆண்டு 1264 தலி­த்துகள் மீதான வன்கொடுமைகளில் 27 படுகொலைகளும், 2008 ஆம் ஆண்டு 1545 வன்கொடுமைகளில் 34 படுகொலைகளும் நடந்துள்ளன.
இதுமட்டுமின்றி, கடந்த சனவரி 1 முதல் 25 சனவரி 2012 வரை, திண்டுக்கல் பசுபதி பாண்டியன், திருச்சி குமரேசன், உசிலம்பட்டி ராஜகோபால், கும்பகோணம் இம்மானுவேல், திண்டுக்கல் முருகன், நாகப்பட்டிணம் ரெங்கையன், திருநெல்வே­லி மூக்கம்மாள், சென்னை அம்பிகா ஆகிய 8 தலி­த்துகள் சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தீண்டாமைப் பாகுபாடு உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும்பாலான த­லித்துகள் படுகொலைகள் செய்யப்பட்டாலும், அப்படுகொலைகளின் பின்னணியில் "குற்றச் சாயங்கள்' பூசப்பட்டு, இவை தனிப்பட்ட ரீதியான படுகொலைகளாகவே சித்தரிக்கப்படுகின்றன. இதனால் இப்படுகொலைகளுக்கு எதிரான கண்டனங்கள் பெரிய அளவில் எழவில்லை. இரண்டு சமூகங்களுக்கு இடையே மோதிக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட படுகொலைகள், சாதிய வன்கொடுமைகள் அப்பட்டமாக நடந்து கொண்டிருக்கக்கூடிய தருவாயில் நடைபெற்ற படுகொலைகள், போலிசார் நடத்திய சூப்பாக்கிச் சூட்டில் பெரிய அளவில் ஏற்பட்ட படுகொலைகள் போன்றவற்றிற்கு எதிராகத்தான் அதிகளவு எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தலி­த் அரசியல் கட்சிகள் இயக்கங்களாக இருக்கின்றபோது இத்தகைய படுகொலைக்கு எதிராக வீறுகொண்டு ஜனநாயகப் போராட்டங்களை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தி வந்தனர். ஆனால், தற்போது இதுபோன்ற எதிர்ப்பு போராட்டங்களோ குறைந்தபட்சம் இப்படுகொலைகளைக் கண்டித்து அரசுக்கு கொடுக்கக்கூடிய அழுத்தங்களோ முற்றிலும் இல்லாமல் போனது கெடுவாய்ப்பானது. த­லித் படுகொலைகளை த­லித் அல்லாத அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என்கிற ஜனநாயகப் பண்பு இருந்தாலும் த­லித் தலைமையிலான அரசியல் கட்சிகளுக்கு கூடுதல் கடமையும் பொறுப்பும் உள்ளது. ஆனால், இன்று அரசு நிறுவனங்களோடு சமரசம் செய்து கொண்டு, விலை போய்க் கொண்டு அல்லது இத்தகைய படுகொலைகளைக் கண்டிக்கிற செயல்பாட்டில் ஒருவிதமான சலி­ப்போடு த­லித் அரசியல் கட்சிகள் உள்ளன. இந்நிலையில் இதுபோன்ற படுகொலைகளைக் கண்டித்து ஆங்காங்கே பாதிக்கப்பட்ட மக்களும் மக்கள் இயக்கங்களும் வ­லிமையான அளவில் குரல் கொடுத்தாலும் அத்தகைய போராட்டங்கள் வெளியே தெரியாமல் போய்விடுகின்றன.
கடந்த 1995 – 1997 ஆண்டுகளில் நடந்த தென்மாவட்ட சாதியக் கலவரங்களில் தலி­த் படுகொலைகளைக் கண்டித்து மிகப்பெரிய மக்கள் எழுச்சியும் த­லித் இயக்கங்களின் பங்களிப்பும் வெகுவாக இருந்தன. ஆனால் இன்றோ, அதுபோன்ற போராட்டங்களுக்காக பாதிக்கப்பட்ட மக்கள் அல்லது ஒன்றுமறியாத தலி­த்துகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
தலி­த் படுகொலைகளில் 3.9 சதவிகிதம் மட்டுமே தண்டனை கிடைக்கிறது. இத்தகைய துயரமான போக்கிற்கு காவல் துறையும், நீதித்துறையும் முக்கியப் பொறுப்பு என்றாலும் அத்துறைகளை சரியாக இயக்க வைப்பதற்கான அரசியல் அழுத்தம் அண்மைக் காலங்களில் பெரிய அளவில் இல்லை. இதுபோன்ற படுகொலை சம்பவங்களில் சட்ட ரீதியான தலையீடுகள் மட்டும் ஆங்காங்கே சிறிய அளவில் பல்வேறு த­லித் இயக்கங்களாலும், தனிப்பட்ட த­லித் ஆர்வலர்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருவது சற்றே ஆறுதலானது. எத்தகைய வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் : 
தலி­த் மூதாட்டி மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை
தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் அருகில் உள்ள கிராமம் கூழையனூர். அக்கிராமத்தில் வசித்து வந்த த­லித் சமூகத்தைச் சேர்ந்த ராஜû என்கிற முதியவர் 02.01.2011 அன்று இறந்து  போனார். இவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக 3.1.2011 அன்று மயானத்திற்கு சென்றிருந்தபோது, அப்பகுதி சாதி இந்துக்கள் ராஜûவின் சடலத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் த­லித்துகளுக்கும் சாதி இந்துக்களும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் 27.01.2011 அன்று இரவு 10.30 மணியளவில் சுமார் 12 பேர் கொண்ட வன்கொடுமை கும்பல் சின்னாயி என்கிற த­லித் மூதாட்டியின் வீட்டில் பெட்ரோல் வெடி குண்டுகளை வீசியுள்ளனர். இக்கொடிய தாக்குதலால் பலத்த காயமடைந்த சின்னாயி இறந்து போனார். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் குற்ற எண்.35/2011 பிரிவுகள் 147, 148, 436, 307, 302 இந்திய தண்டனைச் சட்டம் (இ.த.ச.) மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(10), 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தாமோதரன், மார்க்கண்டன். சிங்கம், முருகன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலி­த் முதியவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை
நாமக்கல், பெரியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லயன். த­லித் சமூகத்தைச் சேர்ந்த நல்லயன் மகன் சேகர் என்பவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவரின் மகள் குல்சார் என்பவரும் காதலி­த்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குல்சாரின் தந்தை ஷாஜகான் 21.02.2011 அன்று மாலை சுமார் 3 மணியளவில் நல்லயன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த நல்லயன்  இறந்துபோனார். இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல் நிலையத்தில் குற்ற எண்.311/2011 பிரிவு 302 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
வீட்டு வேலைக்காக கேரளாவிற்கு கடத்தப்பட்ட தமிழக சிறுமி படுகொலை
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகில் உள்ள கிராமம் கருவேப்பிலங்குறிச்சி. இக்கிராமத்தில் வசித்து வருகிற இருளர் சமூகத்தைச் சேர்ந்த வெள்ளையன் என்பவரின் 11 வயது மகள் தனலட்சுமி என்பவர் வீட்டு வேலைக்காக கேரளா – எர்ணாகுளம் அருகில் உள்ள ஆலுவா பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வீட்டின் உரிமையாளர்களான ஜோஸ்குரியன் – சிந்து தம்பதியினர் தனலட்சுமிக்கு உணவு கொடுக்காமல் நாய் கூண்டில் அடைத்து வைத்து உடம்பில் சிகரெட்டால் சுட்டு துன்புறுத்தியுள்ளனர். கத்தியாலும் உடம்பில் வெட்டுக் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் ஆலுவா, கோலன்சேரி எம்.ஓ.எஸ்.சி. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த தனலட்சுமி 24.01.2011 அன்று இறந்து போனார். இச்சம்பவம் ஆலுவா காவல் நிலையத்தில் குற்ற எண்.522/2011 பிரிவுகள் 302 இ.த.ச., இளம்சிறார் நீதிச்சட்டம் பிரிவு 26 மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல் பங்கில் வழிவிடவில்லை என்பதால் ஆத்திரம் – சாதி இந்துவின் கொடூரத் தாக்குதலால் த­லித் படுகொலை
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள கிராமம் கீழநாலுமூலைகிணறு. இக்கிராமத்தில் வசித்து வந்த த­லித் சமூகத்தைச் சேர்ந்த பச்சிராஜன் என்பவர் 14.06.2011 அன்று மதியம் 3 மணியளவில் திருச்செந்தூர் – திருநெல்வே­ சாலையில் பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த முத்து என்கிற சாதி இந்து, பச்சிராஜனைப் பார்த்து, நீ கீழநாலுமூலைகிணறு கிராமத்தைச் சேர்ந்தவன் தானே, வழியை விடு; நான் முதலி­ல் என் வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக் கொள்கிறேன் என்று கூற, அதற்கு பச்சிராஜன், உங்கள் வயது என்ன? என் வயது என்ன? இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறீர்களே என்று கேட்டதற்கு, ஆத்திரமடைந்த முத்து சாதி ரீதியாக இழிவாகப்பேசிக் கொண்டே தம்முடைய வேனை இயக்கி பச்சிராஜன் மீது மோதி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல்நிலைய குற்ற எண்.273/2011 பிரிவு 302 இ.த.ச. மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
தலி­த் பெண்கள் மீதான வன்கொடுமைகள்
கடந்த 2010 ஆம் ஆண்டு 24 த­லித் பெண்களும், 2009 ஆம் ஆண்டு 30 தலி­த் பெண்களும், 2008 ஆம் ஆண்டு 30 த­லித் பெண்களும் பா­லியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், "எவிடன்ஸ்' அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் 2011 ஆம்  ஆண்டில் 336 வன்கொடுமைகளில் 20 பா­லியல் வல்லுறவும், 12 பாலி­யல் வல்லுறவுக்கு முயன்ற கொடுமையும் நடந்துள்ளது. பா­லியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 20 பெண்களில் 19 (95 சதவிகிதம்) பெண்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள்.
சாதிய மோதல்
இதுமட்டுமின்றி, 336 வழக்குகளில் 19 (6 சதவிகிதம்) சாதிய மோதல்களும், 25 பெண்கள் உட்பட 62 (18 சதவிகிதம்) தலி­த்துகள் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடந்துள்ளன. த­லித்துகள் மீதான கொலை முயற்சி நிகழ்வுகள் 42 (12.5 சதவிகிதம்) நடந்துள்ளன. 19 சாதிய மோதல்களில் 4 நிகழ்வுகள் திண்டுக்கல் மாவட்டத்திலும், 3 நிகழ்வுகள் நாமக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டத்திலும் நடந்திருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
"எவிடன்ஸ்' அமைப்பு களஆய்வு மேற்கொண்ட 336 வன்கொடுமை நிகழ்வுகளில் 22 பெண்கள் உட்பட 39 (12 சதவிகிதம்) நிகழ்வுகளில் நிலத்தின் அடிப்படையில் வன்கொடுமைகள் நடந்துள்ளன.
தலி­த்துகள் மீதான வன்கொடுமைகளில் முத­லிடம் விழுப்புரம் மாவட்டம். தலி­த் மக்கள் தொகையில் 28ஆவதாகஉள்ள மதுரை, வன்கொடுமைகளில் மூன்றாவது இடம். நீதிமன்ற விசாரணை நிலுவையில் முத­லிடம் சிவகங்கை. காவல் விசாரணை நிலுவையில் முதலி­டம் விருதுநகர். பாலி­யல் வன்கொடுமையில்  5.8 சதவிகிதம் மட்டுமே தண்டனை.
children_370தமிழகத்தில் 2010 ஆம் ஆண்டு தலி­த்துகள் மீது 1631 வன்கொடுமைகள்  நடந்துள்ளன. பழங்குடியினர் மீது 33 வன்கொடுமைகள் நடந்துள்ளன. தலி­த்துகள் மீது நடந்த வன்கொடுமைகளில் 103 சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளன. இரண்டாவதாக விருதுநகர் மாவட்டத்தில் 99, மூன்றாவதாக மதுரை மாவட்டத்தில் 93, நான்காவதாக கடலூர் மாவட்டத்தில் 92, அய்ந்தாவதாக சிவகங்கை மாவட்டத்தில் 88, ஆறாவதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 87 சம்பவங்கள் நடந்துள்ளன.
தமிழகத்தில் அதிகமான தலி­த் மக்கள் தொகையைக் கொண்டது விழுப்புரம் மாவட்டம். இது, வன்கொடுமை அதிகளவு நடக்கக்கூடிய முதல் மாவட்டமாகவும்  உள்ளது. ஆனால், வன்கொடுமை சம்பவங்கள் இரண்டாவதாக உள்ள விருதுநகர் மாவட்டம் தலி­த் மக்கள் தொகையில் 14 ஆவது இடத்தில் உள்ளது. வன்கொடுமை நடக்கக்கூடிய மூன்றாவதாக உள்ள மதுரை மாவட்டம் த­லித் மக்கள் தொகையில் 28ஆவது இடத்தில் (மதுரை மாநகரத்தின் மக்கள் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை) உள்ளது. தலி­த் மக்கள் தொகையில் இரண்டாவதாக உள்ள வேலூர் மாவட்டத்தில் 27 வன்கொடுமை நிகழ்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
தலி­த் மக்கள் குறைவாக இருக்கக்கூடிய பகுதிகளில் அதிகளவு வன்கொடுமை நடந்து வருவதைக் கண்டறிய முடிகிறது. தலி­த் மக்கள் தொகையில் 19 ஆவது இடத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் ஒரே ஒரு வன்கொடுமை சம்பவம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 2010 வரை தமிழகத்தில் தலி­த் படுகொலைகள் 22; 24 வன்கொடுமைகள் நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில் முத­லிடம் சிவகங்கை மாவட்டம். இம்மாவட்டத்தில் 395 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரண்டாவதாக மதுரை மாவட்டத்தில் 358, மூன்றாவதாக விழுப்புரம் மாவட்டத்தில் 343, நான்காவதாக திருநெல்வேலி­ மாவட்டத்தில் 277, அய்ந்தாவதாக விருதுநகர் மாவட்டத்தில் 205 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
தமிழகத்தில் 3,568 வன்கொடுமை வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் உள்ளன. அவற்றில் 187 வழக்குகளுக்கு (5.2 சதவிகிதம்) மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. 577 வழக்குகள் (16 சதவிகிதம்) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. த­லித் கொலை வழக்குகளில் 3.9 சதவிகிதம் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. 22.5 சதவிகிதம் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. த­லித் பாலி­யல் வன்கொடுமைகளில் 5.8 சதவிகித வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. 11.6 சதவிகித வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சாதிய ரீதியாக இழிவாகப்பேசுகிற வன்கொடுமைகளில் 4.7 சதவிகிதம் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது.
தமிழகத்தில் தற்போது காவல் விசாரணையில் நிலுவையில் உள்ள வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 2,092. இவற்றில் முதலி­டம் விருதுநகர் மாவட்டத்தில் 160 வழக்குகளும், இரண்டாவதாக மதுரை மாவட்டத்தில் 142 வழக்குகளும், மூன்றாவதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 130 வழக்குகளும், நான்காவதாக விழுப்புரம் மாவட்டத்தில் 111 வழக்குகளும், அய்ந்தாவதாக திருநெல்வேலி­ மாவட்டத்தில் 101 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 2092 வழக்குகளில் 1020 வழக்குகளுக்கு மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடக்கக்கூடிய சாதிய ரீதியான வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்த அளவே பதிவு செய்யப்பட்டாலும் தண்டனை வெறும் 5 சதவிகிதமே உள்ளன. குறிப்பாக, கொலை (3.9 %), பா­லியல் வன்கொடுமை (5.8 %) உள்ளிட்ட கொடும் குற்றங்களில் ஈடுபடுகிற குற்றவாளிகளில் 95 சதவிகிதத்தினர் தப்பித்துக் கொள்கின்றனர்.
1989 ஆம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (11.11.1989) கொண்டு வரப்பட்டு 22 ஆண்டுகள் கடந்த பின்னரும் இச்சட்டம் திறம்பட நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் மத்திய அரசோ, மாநில அரசோ வன்கொடுமைகளை ஒழிப்பதில் குறிப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உரிய அக்கறை காட்டவில்லை என்பது தெரிய வருகிறது.
தலி­த் மக்கள் காவல்நிலையம் சென்று புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணையில் ஈடுபடுவது, அரசு குற்ற வழக்கறிஞர் வழக்கை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அரசு தரப்பினர் பாதிக்கப்பட்ட தலி­த்துகளுக்கு எதிராகவே உள்ளனர்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட மாநில அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டமே கடந்த தி.மு.க. ஆட்சியில் 03.11.2010 அன்றுதான் நடத்தப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சரியாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்வதற்குதான் மாநில அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இக்குழுவின் தலைவர் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. புதிதாக வந்துள்ள அ.தி.மு.க. அரசு உடனடியாக மாநில அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுவினை ஏற்படுத்தி, இக்குழு திறம்பட பணியாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கிற சாதித் தலைவர்கள், சில ஊடகங்கள், அரசியல் கட்சிகள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பகுப்பாய்வு செய்கிற திறன் இருக்குமானால், மேற்கண்ட புள்ளி விவரங்களின் அடிப்படையிலாவது இச்சட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்பதை உணர்வார்கள்.
கடந்த 2009 – 2010 ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்திற்காக தமிழக அரசு ஒதுக்கிய நிதி ரூ.49.80 லட்சமாகும். இன்றைய காலகட்டத்தில் அந்நிதியில் 5 வீடுகள் கட்டலாம். இதைக் கொண்டு எப்படி தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு வர முடியும்? இத்திட்டங்களும் பெயரளவிலான திட்டங்களாகவே உள்ளன. தமிழக சட்டமன்றத்தில் 44 தலி­த் மற்றும் பழங்குடியின சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 20 விழுக்காடு சட்டமன்ற உறுப்பினராக த­லித்துகள் இருந்தாலும் அமைச்சர்களாக இருப்பது 2 பேர்தான். ஆனால், கவுண்டர் சமூகத்தில் 8 அமைச்சர்கள் உள்ளனர். இதை பாகுபாடு என்பதா? ஆளுகின்ற கட்சியின் நிலைப்பாடு என்பதா? தலித் சட்டமன்ற உறுப்பினர்களும் தீண்டாமை ஒழிப்பு குறித்தோ, த­லித் மக்களின் மேம்பாடு குறித்தோ ஆக்கப்பூர்வமான விவாதங்களையோ, செயல்திட்டங்களையோ எடுத்து வைத்ததாகத் தெரியவில்லை.  சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய தலி­த் உறுப்பினர்கள் கட்சிக்கு அடிபணியக்கூடிய பரிதாபத்திற்குரியவர்களாக உள்ளனர். த­லித் அரசியல் கட்சிகள் சட்டமன்றத்திற்கு போக முடியாமல், த­லித் மக்களின் முக்கியப் பிரச்சனைகளையும் அரசியல் தளங்களில் எடுத்துச் செல்லாமல் ஒருவிதமான மய்ய நீரோட்ட அரசியலி­ன் ஏகபோக கனவு மன்னர்களாகவே இருந்து வருகின்றனர்.
பரமக்குடியில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டால் 6 தலித்துகள் கொல்லப்பட்டபோது, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான எஸ்.சி., எஸ்.டி. நலச்சங்கங்கள் எந்த கண்டனத்தையும் பதிவு செய்ததாகத் தெரியவில்லை.  இதனிடையே மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது, த­லித் இளைஞர்களும், ஆர்வலர்களும், தலி­த் இயக்கங்களும்தான். இவர்களைக் கொண்டுதான் வன்கொடுமை ஒழிப்பில் ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை கொண்டு செல்ல முடியும். இத்தகைய குழுக்களுக்கு இடைஞ்சல் செய்யாமல், அதிகாரிகளிடம் விலை போகாமல், இயக்கங்களை மிரட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களிடம் இருக்கிறது.
சமத்துவப் பாடத்திட்டத்தை கட்டாயமாக்குக!
Dalit_620
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மறுக்கிற காவல் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 4 இன் கீழ் வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு சிறப்பு சுற்றறிக்கையை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
வன்கொடுமையை தடுக்கத் தவறுகிற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடந்த ஏப்ரல் 2011 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆணை வெளியிட்டுள்ளது. அவ்வாணை நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பதிவு செய்ய குறுக்கீடு செய்யக்கூடிய ஆதிக்க சாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தலித் படுகொலை மற்றும் பா­லியல் வல்லுறவு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க துரிதமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
வன்கொடுமையில் ஈடுபடுகிற குற்றவாளிகளுக்கு முன்ஜாமின் கொடுக்கக்கூடாது என்கிற விதி இருப்பதால், உயர்நீதிமன்றத்தில் சரண்டர் மனு போட்டு அதன் மூலம் முன்ஜாமின் பெறுகிற தந்திரத்தை அரசு அனுமதிக்கக்கூடாது.
பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட குழுக்களை மாவட்டந் தோறும் அமைத்து அனைத்து கிராமங்களிலும் தீண்டாமை குறித்த விரிவான ஆய்வினை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாய்வு சடங்குத்தனமான ஆய்வாக இல்லாமல் தர நிர்ணயத்துடன் சமூக நீதி அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டு, அவற்றின் முடிவுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
தீண்டாமை நடைபெறக்கூடிய கிராமங்களை கண்டுணர்ந்து அப்பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். அக்கிராமங்களில் அனைத்து தரப்பு மக்களிடம் சமூகக் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த வேண்டும். அதற்கென்று தனித்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
தீண்டாமைக் கொடுமைகளுக்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு எச்சரிக்கை அடிப்படையிலான விளம்பரங்களை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். கிராமம் தோறும் சுவரொட்டிகள் மூலம் அவை ஒட்டப்பட வேண்டும்.
பட்டியல் சாதியினர், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முறையாக செயல் படுத்தாத காவல் துறையினர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்கென்றே தனியாக ஒவ்வொரு வட்டத்திலும் டி.எஸ்.பி. தகுதியில் உள்ள அதிகாரியின் கீழ் சிறப்பு காவல்நிலையம் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய காவல் அதிகாரிகளுக்கு சர்வதேசிய மனித உரிமை தர நிர்ணயம் மற்றும் அறிவியல் பூர்வமான விசாரணை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.
வன்கொடுமை ஒழிப்பு குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடக்கப் பள்ளியில் இருந்து கல்லூரி வரை உள்ள அனைத்து படிப்புகளிலும் ஒரு பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
வன்கொடுமையால் கொலை செய்யப்படுகிற த­லித்துகளுக்கு குறைந்தபட்ச நிவாரணமாக ரூ.10 லட்சம் மற்றும் பாலி­யல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்படுகிற தலி­த் பெண்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் ரூ.10 லட்சம்; மற்ற வன்கொடுமைகளுக்கு குறைந்தபட்ச நிவாரணம் ரூ.2 லட்சம் என்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 இல் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கக்கூடிய நிதி போதுமானதாக இல்லை. எனவே, தற்போது ஒதுக்கக்கூடிய நிதியைவிட மூன்று மடங்கு உயர்த்தி அம்மக்களுக்கான உரிமைகளைப் பரந்துபட்ட அளவில் எடுத்துச்செல்ல அரசு வழிவகை செய்ய வேண்டும்.
தீண்டாமைக் கண்காணிப்பு குழு என்கிற சமூக ஆர்வலர்கள் குழுவினை ஒவ்வொரு வட்டத்திலும் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர் அருகே தலித் இளைஞரை அடித்துக் கொன்ற போலீசார்: நடவடிக்கை கோரும் சிபிஎம்

விருதுநகர்: தலித் இளைஞரை அடித்துக் கொலை செய்த போலீஸார் மற்றும் அவர்களுக்கு துணை போன போலீஸ் அதிகாரிகள் மீது உடனே நவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது புதுக்கோட்டை பாறைப்பட்டி. இந்த ஊரைரைச் சேர்ந்தவர் பாலமுருகன். அவர் டிராக்டர் ஓட்டுனராக வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி 15ம் தேதி அன்று சின்னக்காளை என்பவரின் டிராக்டரை எடுத்துக் கொண்டு அழகாபுரி அருகே உள்ள வடுகபட்டி ஓடை வழியாகச் சென்றுள்ளார்.

அங்கு நத்தம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்கள், பாலமுருகனை வண்டியிலிருந்து கீழே இழுத்துப் போட்டு கையில் வைத்திருந்த கடப்பாறையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவரது மார்பு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் நிலை தடுமாறிய பாலமுருகன் மயங்கி தரையில் விழுந்துவிட்டார்.

அப்போது டிராக்டரை பின் தொடர்ந்து வந்த அதன் உரிமையாளர் சின்னக்காளை உடனே பாலமுருகனின் அண்ணனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். பின்பு கீழே விழுந்து கிடந்த பாலமுருகனை தூக்கியுள்ளார். அப்போது அவர் இறந்து போனது தெரிய வந்தது.

இதையடுத்து அவரது உறவினர்கள் அனைவரும் பாலமுருகன் மரணத்திற்குக் காரணமானவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. பக்கத்து கிராமத்தினருக்கும், இவர்களுக்கும் மணல் அள்ளுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டார் என்றும் போலீசார் தவறான தகவலை கொடுத்துள்ளனர். மேலும் சம்பவத்தை நேரில் பார்த்த டிராக்டர் உரிமையாளர் சின்னக்காளையை சட்ட விரோதமாக காவல் நிலையத்தில் அடைத்து வைத்து மிரட்டியுள்ளனர்.

காவல்துறையைச் சேர்ந்தவர்களே தலித் இளைஞரை அடித்துக் கொன்றுவிட்டு பிரச்சனையை திசை திருப்பும் வேலையை செய்து வருகின்றனர். இதனை சிபிஎம் விருதுநகர் மாவட்டக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, தலித் இளைஞர் கொலையில் ஈடுபட்ட 2 காவலர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் ஆகியோர் மீதும் வன்கொடுமை சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாலமுருகனின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்

2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பிரபலமடைந்திருந்த அவர், தலித் இலக்கியம் குறித்த விவாதங்கள் தீவிரம் பெற்றிருந்த 1980 -90 களில் அதில் நேரடியாகப் பங்கேற்கவில்லை எனினும் '"அறைக்குள் வந்த ஆப்ரிக்க வானம்'  "  ‘ பிணத்தை எரித்தே வெளிச்சம்’ என்ற தனது மொழிபெயர்ப்பு நூல்களின் மூலம் அதற்குப் பங்களிப்புச் செய்தவர்.
1985 ஆம் ஆண்டு நான் பாண்டிச்சேரிக்குப் பணி மாறுதல் பெற்று வந்த சில மாதங்களிலேயே அவரது அறிமுகமும் தொடர்பும் எனக்குக் கிடைத்தது. 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற எனது திருமண நிகழ்வில் வெளியிடப்பட்ட எனது கவிதை நூலான ‘ இதனால் யாவருக்கும்’ அவரது முன்னுரையோடு வெளிவந்தது. அவரது தம்பியும் தற்போது புகழ்பெற்று விளங்கும் திரைப்பட கலை இயக்குனருமான மஹி அந்த நூலுக்கு அட்டைப் படம் வரைந்து தந்தார்.
சாதியின் கொடூர நிழல் இருளாகக் கவியாத சென்னைப் பெருநகரச் சூழலில் பிறந்து வளர்ந்தவர் இந்திரன். ஓவியக் கலையோடு நெருங்கிய தொடர்புகொண்ட குடும்பம் அவருடையது. சாதிக் கொடுமைகளை அனுபவிக்காதவர் என்றாலும் சாதி குறித்த தெளிவு அவருக்கு உண்டு. மும்பையில் பணியாற்றியபோது அங்கு எழுச்சியோடு பரவிக்கொண்டிருந்த தலித் பேந்தர்ஸ் இயக்கத்தின் செயல்பாடுகளையும், அதன் முன்னணியில் இருந்த தலித் எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவர் நெருக்கமாக அறிந்தவர்.
1986 ஆம் ஆண்டு வாக்கில் தலித் இலக்கியத்துக்கென சிற்றிதழ் ஒன்றைத் துவக்கவேண்டுமென்று நானும் அவருமாக பாண்டிச்சேரி கடற்கரையில் அமர்ந்து முடிவுசெய்தோம். ‘அடையாளம்’ என்று அதற்குப் பெயரையும் தேர்வுசெய்தோம்.அதற்கான படைப்புகள் சிலவற்றையும் தொகுத்தோம். அதற்காக நான் ‘ காடாக சம்பு … ‘ எனத் தொடங்கும் கவிதை ஒன்றையும் எழுதித் தந்தேன். ( அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு தற்போது நானும் அழகரசனும் தொகுத்து ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பகத்தின்மூலம் வெளியிட்டிருக்கும் Tamil Dalit Anthology இல் இடம்பெற்றிருக்கிறது.) அந்த இதழை அச்சிடும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார். தலித் இலக்கிய இதழ் ஒன்றை நடத்துவதில் அவருக்கிருந்த தயக்கத்தாலும், அந்த நேரத்தில் அவரது நண்பரகள் சௌந்தர் மற்றும் கதிர்வேலன் ஆகியோர் ஆரம்பித்த ‘பயணம்’ என்ற சிற்றிதழாலும் ’அடையாளம்’ வெளிவராமல் போயிற்று.அப்போது நான் எடுத்த முயற்சி செயல்வடிவம் பெற சுமார் பத்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டியதாயிற்று. ‘தலித் ‘ என்ற பெயரில் நான் பத்திரிகையைத் துவக்கியதன்மூலமே அது நிறைவேறியது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புகளைச் செய்துவருகிறேன். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புகளையும் கவனித்து வருகிறேன். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் பெரும்பாலும் தன்னார்வத்தின் அடிப்படையிலேயே அதைச் செய்கிறார்கள். ஆனால் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பவர்கள் அப்படியல்ல. அவர்கள் அதைத் தொழிலாகச் செய்கிறார்கள். நான் கவனித்த இன்னொரு விஷயம் : ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பலர் தலித்துகள்- இந்திரன், ரவிக்குமார், ராஜ்கௌதமன். பல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டிருக்கும் சா.தேவதாஸ் ஒரு தலித் என யாரோ சொன்ன நினைவு. இதற்கு நேர் மாறாக தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பலர் பிராமண சமூகத்தவர்களாக உள்ளனர். அவர்களில் பலருக்கு ஆங்கிலம் தெரிந்த அளவுக்குத் தமிழ் தெரியவில்லை என்பது அவர்களது மொழிபெயர்ப்புகள் காட்டும் உண்மை.
சாகித்ய அகாதமி நிறுவனம் ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளில் தமிழில் ஒரு தலித் எழுத்தாளருக்குக்கூட அந்தப் பரிசு தரப்படவில்லை என நான் அண்மைக்காலமாகக் குரலெழுப்பி வந்தேன். அது உரியவர்களின் காதுகளை எட்டிவிட்டதுபோலும் அதனால்தான் இந்திரன் இப்போது தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். இந்தத் தெரிவு எப்படி செய்யப்பட்டிருந்தாலும் இந்த விருதுக்கு முற்றிலும் தகுதியான ஒருவர்தான் அவர். இந்திரனை வாழ்த்துகிறேன்.

தலித் விடுதலைக்கட்சி பொதுக்கூட்டம்

அனுப்பர்பாளையம்; மேற்கு தமிழகத்தில் அருந்ததியர்கள் மீதான அடக்கு முறையை கண்டித்து, தலித் விடுதலைக்கட்சி மற்றும் அம்பேத்கர் பொதுத் தொழிலாளர் சங்கத்தின்  சார்பில் பெருமாநல்லூர் நால்ரோட்டில் நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. 
கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றியக்குழு கனகசபாபதி முன்னிலை வகித்தார்.  தலித் விடுதலைக்கட்சியின்  மாநில பொதுச் செயலாளர் செங்கோட்டையன் கண்டன உரையாற்றினார். மாநில துணைப் பொது செயலாளர் பழ.சண்முகம், மேற்கு மண்டலச்செயலாளர் சிந்தனைச்செல்வன், மாநில இளைஞரணிச்செயலாளர் விடுதலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்ட இறுதியில், வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழ்மாறன் நன்றி கூறினார்.
பட்டாவுக்கான நிலம் ஒதுக்கித்தர கோரிக்கை
திருப்பூர்: மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது அவிநாசி பழங்கரை கிராமம் இந்திரா நகர் தேவம்பாளையம் ஊர் பொதுமக்கள் கலெக்டர் மதிவாணனிடம் வழங்கிய மனு: எங்களுக்கு 2001ம் ஆண்டு ச.எண் 277/2சி எண் உள்ள நிலத்தில் பட்டா வழங்கப்பட்டது. உள்ளூர் மக்கள் நாற்பது பேருக்கும் வெளியூர் மற்றும் திருப்பூர் அருந்ததியர் 80 பேருக்கும் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.  5 அடி ஆழமுள்ள பள்ளமான பகுதியில் உள்ளூர் மக்கள் 15 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா வழங்கி பல மாதங்களாகியுள்ள நிலையில் எங்களுக்கு இன்னும் இடம் ஒதுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு உடனடியாக இந்த நிலத்தை அளவு செய்து பட்டாவின்படி மேடான பகுதியில் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். இவ்வ £று அதில் கூறப்பட்டுள்ளது.

தலித் அடையாளம் – டி.எம்.மணியின் நூல்களை முன்வைத்து

சில நாட்களுக்கு முன் நடந்த தலித் தொடர்பான கூட்டமொன்றில் நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தபோது "இக்கூட்டத்தில் வழங்கப்படும் சாப்பாட்டில் மாட்டுக்கறியெல்லாம் இல்லையே ! அதுவும் தலித் கூட்டத்தில் மாட்டுக்கறி இல்லாமல் சாப்பாடா?" என்றார். வேறொரு தருணத்தில் எழுத்திலும், பேச்சிலும் கொச்சையான சொற்களை கையாளும் எழுத்தாளர் ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது "அந்த எழுத்தாளர் தலித் அதனால் அவர் அப்படி பேசுவதுதானே சரியாக இருக்க முடியும்" என்றார்.
     மாட்டுக்கறியும், கொச்சையாக பேசுவதும் தலித்துகளின் அடையாளம் என்பது இதன் பொருள். தலித் பிரச்சனையில் கரிசனம் காட்ட விரும்பும் இடது சாரிகள் குறித்து ஒரேவிதமான கருத்தினையே வெளிப்படுத்துகின்றனர். குடி, அழுக்கு போன்றவற்றையும் தலித்துகளின் அடையாளமாக பேசமுனைந்த அறிவுஜீவிகளும் இங்கிருந்தனர்.
     dm_mani_pho_370ஆனால் இது குறித்து தலித் மக்கள் நினைப்பது என்ன? இவை தலித் அடையாளங்கள் தானா? என்பதே இக்கட்டுரை எழுப்ப விரும்பும் வினா. ஒருவகையில் சொல்லப்படும் இந்த அடையாளங்கள் யதார்த்தத்தில் நிலவுவைதான். சாதிரீதியாக தொழிலும், இருப்பிடமும், வாழ்முறையும் பாகுபடுத்தப்பட்டு திணிக்கப்பட்டுள்ளது. தலித்து களுக்கென்று ஒதுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து மாறுபடுவது சாதி மீறலாகும். அதை சாதிசமூகம் அனுமதிப்பதில்லை. விரும்பும் தொழிலை, உணர்வை, வாழ்முறையை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான சுதந்திரத்தை சாத்தியப்படுத்துவதே சாதிய மறுப்பாக இருக்க முடியும்.
     எனில் தலித்துகளிடம் நிலவும் இன்றைய அடையாளங்களை அவர்களுக்கேயுரியது என்று சொல்வது சாதி மறுப்பாகுமா? மாட்டுக்கறியோ, பறையடிப்பதோ அவர்களின் விருப்பமாக இருக்குமானால் அது பிரச்சினையில்லை. ஆனால் அதை அவர்களின் அடையாளம் என்று சொல்வதன் மூலம் இச்சமூகத்தின் பிற தளங்களில் அவர்களின் பங்களிப்பு மறுக்கப்படுகிறது. பொதுத்தளத்தின் மீதான அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. உண்மையில் தலித் மக்கள் அவர்களின் இன்றைய அடையாளங் களிலிருந்து விடுபட்டு சுயமரியாதை மிக்க வாழ்வை அடைய விரும்புகின்றனர். ஆனால் அத்தகைய புரிதலை உள்வாங்கி செயற்படும் அமைப்புகளாக களமும், அரசியல் தளமும் இல்லையென்பது வருத்தமே.    
     இப்புரிதலை நம் சூழலில் பெறாமல் போனதன் காரணம் என்ன? தலித் மக்களின் விருப்பங்களிலிருந்தும், கடந்த கால இயக்கங்களின் தொடர்ச்சியிலிருந்தும் தலித் அடையாளத்தை யாரும் உருவாக்கிக் கொள்ளவில்லை.
     கடந்த கால தலித் அமைப்புகளும், தலைவர்களும் பெரும் திரட்சியை சாத்தியப்படுத்தாவிட்டாலுங்கூட இத்தகைய புரிதலிலிருந்து செயற்பட்டனர். சாதியும், சாதிசார்ந்த கீழான அடையாளங்களும் தலித் மக்கள் மீது சுமத்தப்பட்டதன் தொடர்ச்சியாகவே அவர்களுக்கு உணவு, தொழில் இருப்பிடம் போன்றவை ஒதுக்கப்பட்டன. எனவே திணிக்கப்பட்ட தொழிலை, உணவை, மறுப்பதும். மறுக்கப்பட்ட அடையாளங்களை தங்களுக்குரியதாக பேசி மீட்டெடுத்தும் செயற்பட்டனர். அத்தகைய முன்னோடி முயற்சிகள் அறியப்படாமல் போனதின் அடிப்படையான பின்னணி எதுவெனில் தலித் மக்களின் போராட்டம்.
     இயக்க வரலாறு போன்றவற்றை யாரும் அறிய மறுத்ததே ஆகும். ஒவ்வொரு இயக்கமும் தங்களின் வருகைக்குப் பின்னர்தான் இம்மக்கள் கண்விழித்தனர். அதுகாறும் அடிமை நிலையிலேயே இருந்ததாக கருதுவதும் இதனால்தான் ஆனால் இத்தகைய எண்ணங்களை மறுக்கும் பதிவுகள் இப்போது எழுத்துகளாக வந்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய பதிவுகள் குறித்து நிலவும் மௌனத்தை கடக்க இக்கட்டுரை முயற்சிக்கிறது.
     தலித் எழுத்து, வரலாறு, பண்பாடு என்று நிலவி வரும் கருத்துக்களிலிருந்து முற்றிலும் விலகிய தலித் எழுத்தை அண்மையில் வாசிக்க முடிந்தது. டி.எம். உமர் ஃபாரூக் என்றழைக்கப்படும் டி.எம். மணி என்ற தலித் தலைவர் எழுதிய நூல்களே அவை. 1960கள் இறுதி தொடங்கி தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம், திருப்பனந்தாள் வட்டாரங்களில் இயற்றப்பட்ட நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் அவர். அமைப்பாக நின்று இப்பகுதி கிராமங்களில் இயங்கியபோது எற்பட்ட அனுபவங்களையும், அதன் வாயிலாக பெற்றுக் கொண்ட கருத்தியல்களையும் 'சாதி ஒழிந்தது' 'செந்தமிழ் நாட்டு சேரிகள்' என்னும் இரண்டு நூல்களாக எழுதியுள்ளார்.
     சாதாரண நடைமுறையாகி விட்ட தலித்துகளின் இழிவாழ்வு. அதற்கு எதிரான தொடர் போராட்டங்கள், சளைக்காத அர்ப்பணிப்பு என்று இயங்கியதால் தலித் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்வது இந்நூல்கள் 30 ஆண்டுகால ஆவணமாய் மாறிநிற்கின்றன. தலித்துகள் குறித்த பழமையான சித்தரிப்புகளோடு முரண்படாத எழுத்துக்களே 'தலித்வாழ்வாக' மாறிவிட்ட சூழலில் இந்நூல்கள் வாசகர்களுக்கு வேறொரு உலகை காட்டுகின்றன. இவ்வாறு காட்டப்படும் இப்பதிவுகளே எதார்த்தமானவை. தான் இழிவு படுத்தப்பட்டதை இப்பதிவுகள் மறைக்கிறது. என்பது இதன் பொருளல்ல, 'எதார்த்தமாகி விட்ட இழிவுகளுக்கு எதிரான போராட்டங்களையும் அதில் பெற்ற வெற்றிகளையும் இவை சொல்கின்றன என்பதே தனித்துவத்திற்கு காரணமாகின்றன'
     இழிவுகளை மறுத்து, மறுக்கப்பட்ட கல்வி உள்ளிட்ட தன்மான வாழ்வுக்கான அம்சங்களைப் பெற முயற்சிக்கிற அப்போராட்டங்கள் சாதி இழிவுகளை சுயமானதாக கருதுவதில்லை இவ்விடத்தில் சாதி தங்கள் மீது திணிக்கப்பட்டவை தானே ஒழிய 'விரும்பி' ஏற்றக் கொண்டவை அல்ல என்னும் புதிய உள்ளடக்கத் தினையும் அவர்கள் உருவாக்குகின்றனர். அதனால்தான் இழிவை சுமத்துவதைக் காட்டிலும், அதற்கு எதிரான போராட்டத்தில் கடுமையாக நடந்து கொள்கின்றனர் ஆதிக்க வகுப்பினர். ஆனால் பெறவிருக்கும் விடுதலையுணர்வுகளுக்கு முன்னால் போராட்டத்தின் வலி தலித்துகளுக்கு லேசாகிப்போகின்றன. தலித் விடுதலைக் கருத்தியலுக்கு இத்தகைய புரிதலை இந்நூல்கள் தருகின்றன.
     சுய அனுதாபத்தை வேண்டாமல் எழுதப்பட்ட தலித் எழுத்துக்கள் மிகக் குறைவே, தலித்துகள், தவிர்த்தமற்ற எழுத்தாளர்கள் யாரும் தங்கள் முன்னோர்களும். வகுப்பினரும் நடத்திய சாதிநடைமுறைகளைக் குறித்து வெளிப்படையாக எழுதவே இல்லை. ஆனால் உலகத்தின் எந்த பாகுபாடுகளுக்கும் குறையாத சாதிப்பாகுபாடு இங்குதான் நிலவுகிறது. இக்குறைகளைத் தவிர்த்த தலித் அனுபவத்தை தரக்கூடிய நூல்களாக இவை மாறியிருக்கின்றன. எழுதுவது இந்நூலாசிரியரின் முன்கூட்டிய திட்டமோ, முழுநேர வேலையோ, அல்ல, நான் இலக்கியவாதியோ எழுத்தாளனோ இல்லை என்று அறிவிக்கும் அவரின் அசாதாரண எழுத்து நடை இது.
     அடர்ந்த காடு, இருண்ட சூழ்நிலை, உடைந்த மனம், பதுங்கி முடங்கிக் கிடக்கிற அற்பமான வாழ்க்கை ஏன் இந்த அவலம்? எதை வாரிக்கட்டிக் கொள்ள இப்படி அவதிப்படுகிறோம்? சொத்துசுகம் சேர்த்துக் கொள்ளவோ? இந்துக்களின் நிலபுலத்தில் மாடி மனையில் பங்கு கேட்கவோ? இல்லையே! நாங்களும் மனிதர்கள் தானே.. என்று விரிகிறது அந்த எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவரின் எழுத்து.
      முதல் நூலின் தொடர்ச்சிதான் இரண்டாம் நூல் அமைப்பு கட்டி போராட்டம் நடத்திய ஊரின் பெயர் சாதிப் பிரச்சினைக்கு எதிராக பேராடியவரின் பெயர் போன்றவற்றை தலைப்புகளாகக் கொண்டு சாதி ஒழிந்தது நூலில் கட்டுரைகளையும், செந்தமிழ் நாட்டு சேரிகள் நூலில் கட்டுரைகளையும் கொண்டுள்ளார். சில கட்டுரைகளை மட்டும் சமூகம் தொடர்பான தம் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எழுத பயன்படுத்தியிருக்கிறார். இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்விற்குள்ளும் டி.எம். மணி இருக்கிறார் நேரடி அனுபவத்திலிருந்து குறிப்பிடத்தக்க சம்பவங்களை மட்டும் தொகுத்து எழுதியுள்ளார்.
     கும்பகோணம், திருப்பனந்தாள் வட்டாரம் காவிரிப்பாயும் நிலப் பரப்பு யாவும் கோவில்களுக்கும், மடங்களுக்கும் உரிமை. இந்நிலங்களில் உழைக்கும் பண்ணையடிமைகளாய் தலித்துகள் இருந்தனர். "உயர்ந்த மதில் சுவர்களுடைய மடம் ஒருபுறம்,. சிவன் கோவில் மறுபுறம்... ஒவ்வொரு சிவன் கோவிலுக்கும் ஒரு தலவரலாறு இருக்கும். இப்படி ஒவ்வொரு சேரிக்கும் ஒரு தல வரலாறு போல. இது கட்டுக் கதையல்ல, காலங்காலமாக சாட்சியங்களாய் இன்னும் சேரிகளில் உயிரோடு இருக்கிறார்கள்." என்பதை சொல்லும் டி.எம். மணி அவ்வாறான 'தலவரலாறு' ஒன்றையும் சொல்கிறார். திருலோகி என்னும் கிராமத்தின் சேரிப்பெண் ஆயிபொன்னு என்பவர் வழக்கமாக செல்லும் மணியக்காரர் பண்ணை சாணியள்ளும் வேலைக்கு 3 நாட்களாக செல்லவில்லை. காரணம் அவருக்கு பிரசவம் ஆகியிருந்தது. இருந்தும் மூன்றாம் நாளே பண்ணை வேலைக்குத் திரும்பினார், கோபத்தோடு அவளை திட்டித்தீர்த்த மணியக்காரர் அவளின் மேலாக்கை பிடித்துக் கொண்டு மூங்கில் கழியால் அடித்தார். பண்ணையாரின் 'மண்ணான' சேரியிலிருக்கும் அவரின் குடிசையில்யாரும் நுழையாதவாறு வேலியும் வைத்தார்.
     ஆயிப்பொன்னுவின் கணவரையும் பண்ணைக்கு வரும்படி சொல்லி அனுப்பினார். கணவனுக்கு நேரவிருக்கும் கதி, தனக்கு ஏற்பட்ட அவமானம் இரண்டும் சேர்ந்து இரண்டு வயதான தன் மூத்த மகன் மணிக்குஞ்சுவை பிறந்த குழந்தைக்கு காவல் வைத்துவிட்டு கூரையிலேயே தூக்குமாட்டி செத்தார் ஆயிபொன்னு. இவைதவிர படி நிலை சாதியமைப்பில் மேலேயுள்ள எல்லா சாதிகளுக்கம் இழிவு வேலை செய்யவேண்டிய நிலை டி.எம்.மணி விவரிப்பதைப் போல "இந்து வீட்டில் ஒருவர் இறந்து விட்டால். முன்னதாகச் சென்று வெட்டியான் சுடுகாட்டில் காத்திருக்க வேண்டும்.
     பிணம் வருவதற்குள் சுடுகாட்டை சுத்தம் செய்து எரிபொருள் சேகரித்து விறகுக் கட்டைகளை அடியில்வைத்து அதன்மேலே விராட்டிகளை அடுக்கி அஸ்திவாரமிட்டு வைத்திருக்க வேண்டும். பிணம் சுடு காட்டிற்கு வரும்போது கட்டாயம் தயார்நிலையில் இருக்க வேண்டும். அடுத்து வண்ணான் செத்தவர் வீட்டிற்குச் சென்று மூங்கில் வெட்டிவந்து பாடைசெய்யும் பணியைச் செய்யவேண்டும். பிணம் தூக்கிச் செல்லும்போது. நோக்கர் கொம்பு ஊதியும், சேங்கண்டி அடித்தும் செல்லவேண்டும். பிணம் இறக்கும்போது வெட்டியான் விலகிக் கொள்ள வேண்டும். அவன் தீண்டாத சாதி அல்லவா? வண்ணானும் அம்பட்டரும் பாடையிலருந்து பிணத்தை எடுக்க வசதி செய்து கொடுக்க வேண்டும். இதற்குள் நாவிதர் கத்தியை எடுத்துக் கொண்டு கொள்ளிவைப்பவர் முடியைச் சிரைப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
     இதில் யாராவது ஒருவர் கடமை தவறினால் அந்தக் கிராமத்தில் சிக்கல் ஏற்பட்டுவிடும். கடமை தவறிய வருக்கு எந்த மாதிரியான தண்டனை என்பது ஊரைப் பொறுத்து. சூழ்நிலையைப் பொறுத்தது" இவை கிராமங்களின் நிலை. இழிதொழில்களுக்கு எதிரான தலித்துகளின் போராட்டம் எந்தக் கிராமத்திலும் எளிதில் நடந்தேறிவிடவில்லை. பெரும் கலவரங்களை ஏற்றபடியே போராட்டங்கள் நடந்தன கலவரத்தோடு பிரச்சினை நிற்பதில்லை. ஏற்கனவே சொந்தமாக நிலமற்ற இம்மக்களுக்கு வேலை மறுப்பு, தானாகவே எரிவதைப் போல கொளுத்தப்படும் குடிசைகள், தாக்குதல், வழக்கு அலைக் கழிப்பு என்பவைகளாக நீடித்தன. இப்படியே முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள்.
     இப்பகுதி அரசியல் கட்சிகளென்றால் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், போன்றவை இருந்தன. கீழ்த்தஞ்சை மாவட்டம்போல கம்யூனிஸ்ட் கட்சி இப்பகுதியில் பரவலாகியிருக்கவில்லை. நக்சல்பாரி பாதையை ஆதரிக்கும் இடது சாரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலித்துகளிடம் தென்பட்டனர். பொதுவாக சுடு காட்டுப்பாதை போன்ற சிவில் உரிமைகளை வலியுறுத்தும் கம்யூனிஸ்ட்கள் சுடுகாட்டில் பிணம் புதைப்பதும் யார் என்பன போன்ற அழுத்தமான பார்வையை இன்று வரையிலும் பெறவில்லை.
     சாத்திர இழிவு ஒழிப்புக்காக பாடுபட்ட திராவிடர் கழகம் அச்சாத்திரர்களால் தலித்துகள் மீது சுமத்தப்படும் இழிவுகளைக் கண்டித்து போராடிய வரலாற்றைப் பெறவில்லை. இந்நிலையில் இழிவு ஒழிப்பு போராட்டங்களை தலித்துகளே தனியாகவும் அமைப்பாகவும் நடத்தவேண்டிய நிலை. அப்படித் தான் தனித்துப் போராடியது நீலப்புலிகள் இயக்கம். இவ்வட்டாரத்தை ஒட்டி தென்னார்க்காடு அமைந்திருந்தமை சாதகமான அம்சமாய் இருந்தது. அப்பகுதியில் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிப் பெற்றிருத்தார் எல். இளையபெருமாள்.
     நீலப்புலிகளின் போராட்டத்திற்கு கைக்கொடுப்பவராக, காங்கிரஸில் இருந்த தலித்தலைவராக இவர் இருந்தார் இந்த இரண்டு நூல்களிலும் பல்வேறு கட்சிகளை, தலைவர்களை விமர்சித்து எழுதிச் செல்லும் டி.எம்.மணி மதிப்போடு 'தலைவர்'என்று விளிக்கிறார் என்றால் அவர் எல். இளையபெருமாள்தான் இதேபோல் வடஆர்காடு பகுதியிலும் இழிவு ஒழிப்புப் போராட்டங்களை குடியரசுக்கட்சி நடத்தியது தமிழகத்தின் பிறபகுதிகளைக் காட்டிலும் தலித்துகள் சற்றுமுன் கூட்டியே 'மேம்பாடு' பெற்றதற்கு இத்தகைய அரசியல் விழிப்புணர்ச்சியும் ஒரு காரணம் இப்பகுதியில் கிராமங்கள்தோறும் இவ்வகையான போராட்டங்களை தொகுக்கும்போது தலித் போராட்டத்தின் வலிமை உணரப்படும் கிராமங்களில் பெரும்பான்மை ஆதிக்கசாதியினருக்கு எதிராக நடத்தப்படும் சாதி மறுப்பு போராட்டங்கள் சாதாரணமானவை அல்ல. இவ்வாறான போராட்டங்களை தலித்சார்ந்து எழுதுவோரும்கூட அறியவில்லை. இப்போராட்ட வரலாற்றை ஏற்காமல் தலித் அடையாளத்தை "செஞ்" சோற்று கடனுக்காய் கம்யூனிஸ்டுகளிடம் விற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் கிராமங்களில் தலித் இயக்கங்களில் போராடிய துண்டா? என்று அண்மையில் எழுதியிருக்கிறார். போராட்ட வரலாற்றை பதிவுசெய்ய வாய்ப் பில்லாமல் போனதற்கு தலித்துகள் மட்டுந்தான் பொறுப்பா?
     இழிவு ஒழிப்பு போராட்டங்களாகவே இப்போராட்டங்கள் நின்று போய் விடவில்லை. கிராமங்கள்தோறும் "கல்விப்பணிகள் நடந்து கொண்டிருந்தன ஊக்கத் தொகை, உதவித் தொகை, உயர்கல்வி நிதி, பகுதி நேரக்கல்வி, இப்படி ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் தொண்டாற்றிச் கொண்டிருந்தனர். சட்டப் பூர்வமாகவும். சாதுர்யமாகவும் சாதிக் கொடுமைக்கு எதிராகப் போராடி வந்தார்கள் இவ்வகை மாற்றங்கள் இழிவுமறுப்பு போராட்டங்கள் நடந்த மற்ற பகதிகளிலும் நடைபெற்றன. வடஆர்காட்டுப் பகுதியில் தொடங்கி நடத்தப்பட்ட இரவுப்பள்ளிகள் ஏராளம். தொடக்கம் முதலே தலித் தலைவர்கள் கல்வி மேம்பாட்டுக்காகப் பாடுபட்டனர்.
     இத்தகைய செயற்பாடுகள் சாதிகுறித்த தனித்துவமான கருத்தியல்களை உருவாக்கிவிட்டன. அதாவது சாதி இழிவோடு இருந்தாலும் அந்த இழிவுதான் நம்முடைய காலகாலமான அடையாளம் என்ற பார்வை அவர்களிடம் இல்லை. அவ்வாறு கருதும்போதுதான் அதிலிருந்து விடுபடுவதற்கான நியாயம் உருவாகிறது. சாதியற்ற தளத்தில் இவர்களின் இடம் என்ன? எனும் கேள்வியும் எழுகிறது. அப்போது தான் சாதிக்கென்று பகுக்கப்பட்ட தொழில் உள்ளிட்ட அடையாளங்களை மறுத்துவிட்டு, மறுக்கப்பட்ட கல்விமேம்பாடு போன்ற சுயமரியாதைமிக்க அடையாளங்களை கையெடுக்கின்றனர். இம்மாற்றத்தின் கருத்தியல் வகிபாகம் என்ன? சாதிசார்ந்த அடையாளங்களை ஏற்பதை மறுத்து விரும்பும் தொழிலையும், அடையாளத்தையும் ஏற்பதே சாதிமறுப்பு என்பதாகிறது. தலித் தலைவர்களின் போராட்டம் இத்திசை நோக்கி இயங்கியிருக்கிறது.
     பண்ணையின் விசுவாசியாக இருந்து பட்டினிகிடந்தே மடிந்த தாத்தா, அடிமைப்பட இன்னொரு பண்ணையைத்தேடி கிடைக்காமல் ஊர் ஊராய் கூலி வேலைக்கு அலைந்த தாய் தந்தை, ஆறாவது தலைமுறையாக அடிமை முறை வந்தபோது நீதிக்கட்சிக்கு ஓட்டுப் போடவில்லையென பண்ணையார் மாணிக்கம் பிள்ளையால் பறிக்கப்பட்ட வேலை என்ற குடும்பப் பின்னணியைக் கொண்ட டி.எம்.மணி யின் அப்பா ஒருமுறை ஈரத்துண்டை உலர்த்துவதற்காக தோளில் போடப்பட்ட போது மணியக்காரரை விட அவர் எத்துணை சிறந்த அறிவாளி. "அப்பா எவ்வளவு நாகரீகமானவர், அந்தக் காலத்திலேயே இலக்கணம் (நிகண்டு) படித்தவர். ராமாயணம், மகாபாரதம், அரப்பலிசதகம், குமரேச சதகம், சீவகசிந்தாமணி போன்ற நூல்களிலுள்ள பாடல்களை யெல்லாம் மனப் பாடமாகவேபாடுவார்" இதையெல்லாம் எந்த சூழ்நிலையில் அவர் படித்தார்.
     இந்துக்களின் தெருவிலுள்ள பள்ளியில் நுழைய தீண்டாமை தடுத்ததால் வெளியே அரசமர நிழலில் அமர்ந்து படித்தவர். அந்தக் காலத்தில் முக்கியப் படிப்பான நிகண்டுகளைப் படிப்பதில் அவர் தேர்ந்தவர் தலித்துகளின் இழிவை மட்டும் சொல்ல விரும்பினோமென்றால் இத்தகைய ஆற்றல்களை யார் சொல்வது? தலித்துகளின் நிலவும் இழிவையே நிரந்தர அடையாளமாக தக்கவைப்பதில்தான் இன்றைய தலித் கலை, இலக்கிய முயற்சிகள் நிற்கின்றன. இந்நிலையை மாற்றும் கல்வி, பொருளாதாரம் குறித்த எவ்வித பார்வையும் செல்வாக்குப் பெற்றுள்ள தலித் இயக்கங்களுக்கு இல்லை. இந்நிலைமை சாதிமறுப்பதாக மாறுவதில்லை. இதை சார்ந்து டி.எம். மணி இந்நூல்களில் எழுதியுள்ள விமர்சனங்கள் முக்கியமானவையாகும் அவை "பறை எனப்படும் தப்பு ஒரு ஓசைக் கருவிதான் சேரியை ஒதுக்கினார்கள், அதற்காக தொழிலை ஒதுக்கினார்கள், தீண்டாமை பாராட்டி மனிதர்களை ஒதுக்கினார்கள். (அதன்படியே அவர்களுக்கென்று) இசையும் கலையும் ஒதுக்கப்படுகிறது.
     நண்பர் கே.ஏ. குணசேகரன் போன்ற அறிவுஜீவிகளுக்கு நன்றாக தப்பு அடிக்கத்தொரியும் என்பதற்காக அதையே இசையாகத் தலையில் கட்டுகிறார்கள். அதைப் போலவே கல்வி மறுக்கப்பட்டதால் தலித்துகளிடம் உருவான ஊனத்தமிழ் வார்த்தைகளை நன்றாகப் புரிந்துக் கொண்ட 'பாமா' போன்ற எழுத்தாளர்கள், இந்த ஊனத் தமிழுக்கு வடிவம் கொடுத்து தலித் இலக்கியம் என்று அதை எங்கள் தலையில் கட்டுகிறார்கள்" என்று எழுதுகிறார்.
     சாதி கற்பிக்கப்பட்ட காலத்தில சாதிக்கென்று ஒதுக்கப்பட்ட தொழில்களை மறுப்பதற்கு பதிலாக அதையே தங்களின் அடையாளமாக சொல்லிக் கொள்ளும்போது சாதிசார்ந்த கருத்தியல் மறுஉற்பத்தி செய்யப்படுகிறது. பொதுத்தளத்தில் மறுக்கப்பட்ட அடையாளங்கள் மீது உரிமையை கோருவதற்கான அரசியலையும் மறுக்கிறது. பறை மட்டுமல்ல சாதியின் பெயரால் பகுக்கப்பட்ட தொழிலையும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட அடையாளத்தையும் அனைத்து சாதியினருக்கும் தேர்வுசெய்துகொள்வதற்கான கோரிக்கையோடு செயற்படுவதே சாதிமறுப்பாக இருக்க முடியும். செத்த மாடெடுத்தல் என்ற சுகாதாரப்பணி தலித்துகள் மீது சுமத்தப் பட்டதால் அத்தோலினால் செய்யப்பட்ட பறையும் அவர்கள் மீது சமத்தப்பட்டது.
     மலமெடுக்க மறுக்கும் அருந்ததியரின் குலத் தொழில் மலமெடுப்பதுதான் என்பது எத்துணை அவதூறு. "தப்புதான் தலித்கலை என்றால் குழல், யாழ் போன்றவை எமக்கு உரிமையில்லை? அகராதியில் அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள் கூட இன்னும் தாய்வழி கூட்டத்திற்கு ஊனத்தமிழ்தான் உரிமையா? தலித் இலக்கியம், தலித் கலை, தலித் பண்பாடு என்பதெல்லாம் ஒதுங்குதல், ஒதுக்குதல் அடிப்படையிலான வர்ணதர்ம கோட்பாடே அம்பேத்கர் சொன்ன சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இங்கு வேலையே இல்லை. எனவே தப்பு அடிக்க மறுப்பதை சமத்துவத்திற்குகான போராட்ட அடித்தளமாகவே பார்த்தோம். தப்புகளை செய்ய செத்த மாடுகள் எங்களுக்குத் தேவையில்லை என்று கோஷமிட்டோம்" என்று அவர் விளக்குகிறார். அவரின் இந்தப் பார்வை தலித்துகளின் நீண்ட போராட்ட மரபிலிருந்தும் தலித் மக்களின் விருப்பங்களிலிருந்தும் எடுக்கப்பட்டமையால் தான் தத்துவமானதாக விளங்குகிறது.
     இந்நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள மற்றுமொருச் செய்தியும் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமானதாகிறது. குடிதாங்கி பிரச்சினைதான் அது. குடிதாங்கி கிராம தலித் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை 'கொள்ளிடக்கரையில்' சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்பதுதான். டி.எம். மணி தலைமையிலான இயக்கம் கிளை அமைக்க சென்ற போது அக்கோரிக்கையை வலியுறுத்திய போராட்டத்தைத் தான் முதலில் எடுத்தனர்.
     உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று தொடங்கி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை போன்றோரிடமும் பிரச்சினையை கொண்டு சென்றனர். 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23இல் செல்வம் என்பவர் இறந்து தூக்கிச் சென்றபோது நூற்றுக் கணக்கான வன்னியர்களால் தலித்துகள் மறிக்கப்பட்டனர். அதுநாள்வரையில் மறிக்காதவர்கள் மறிப்பவர்களாக மாறியிருந்ததற்கு காரணம் அவர்களிடம் வன்னியர் சங்கம் உருவாகியிருந்ததுதான். பிரச்சினையின் காரணமாக பிண அடக்கத்தை மறுநாளுக்கு ஒத்திவைக்கச் சொன்ன காவல் துறையின் அறிவுரையின் பேரில் அவ்விடத்திலேயே பிணத்தை வைத்துச் சென்றனர் மறுநாள் பிணத்தை காவல்துறையே எங்கோ வீசிவிடுகின்றனர். அதனையட்டி தலித்துகளுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த மோதலில் காவல் ஆய்வாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். மறுநாள் அங்கிருந்த 9 சேரிகளில் புகுந்த காவல்துறை அவர்களை அடித்து நொறுக்கியது.
     குடிதாங்கியைச் சேர்ந்த 22 தலித் பெண்கள் உள்ளிட்ட 104 பேர் மீது கொலைமுயற்சி வழக்கு (307) உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கை பதிந்தனர். இதனால் இடர்பாடுகளுக்கு பின்னும் அம்மக்களின் பிணங்களை பழைய சுடுகாட்டில் புதைப்பதில்லை. பொதுச் சாலையில்தான் எடுத்துச் செல்வோம் என்ற முடிவிலிருந்தும் மாறவில்லை. அதனால் வீதிகளிலும் வாய்க்காலிலும் பிணங்களை புதைக்கவேண்டிய நிலை. இந்த காலக்கட்டத்திலும் பல்வேறு வழக்குகளை அம்மக்கள் சுமந்தனர்.
     சுமார் 4 ஆண்டுகாலம் இப்போராட்டம் நீடித்தது. இவை எல்லாவற்றின் பின்னணியில்தான் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. அன்றைக்கிருந்த அதிமுக அரசு சுடுகாட்டுப் பயன்பாட்டுக்காக பொதுப்பாதையை அனுமதித்த சூழல், 82 வன்னியவகுப்பினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலை. அச்சூழலில்தான் ராமதாஸின் வருகை நிகழ்ந்தது. அப்பகுதி சேரிமக்கள் அவரின் வருகையை விரும்பாத போதும் அவரை சுடுகாட்டுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றவர்களும் தலித்துகளே, ஆனால் இன்றைக்கு குடிதாங்கிப் போராட்டம் என்றாலே அறியக் கூடியவராக ராமதாஸின் பெயராகிவிட்டது.
     நான்கு ஆண்டுகால தலித்துகளின் நெடிய போராட்டத்திற்கு கிடைக்காத அங்கீகாரம் தலித் அல்லாத ஒருவரின் சிறிய தலையீட்டிற்கு பெரிய அளவில் கிடைத்து விடுகிறது. தமிழகத்தில் இதுபோன்று சொல்லப்படாத போராட்ட உண்மைகள் ஏராளமுண்டு அண்மைக்கால உதாரணம். கடைசி இரண்டு வருடங்களில் தலையிட்ட கம்யூனிஸ்டுகளின் போராட்டமாகிவிட்ட பாப்பாப்பட்டி பிரச்சனை.
     குடிதாங்கிப் பிரச்சினை குறித்து கள ஆய்வு செய்து வெளியிட்ட நிறப்பிரிகை இதழும் இந்த வரலாற்றுப் பொய்க்கு காரணம் என்று டி.எம். மணி கூறுகிறார். ராமதாஸின் வருகையை தூக்கிப் பிடிப்பதிலேயே கவனம் செலுத்திய அவ்விதழின் கள ஆய்வு விழிப்புணர்வும், போர்க்குணமும் உடைய தலித் அமைப்புகளே அங்கில்லை யென எழுதியிருந்ததை சுட்டிக் காட்டுகிறார். பிறகு திருமாவளவனும் ராமதாஸை தமிழ்க்குடிதாங்கி என்று பாராட்டினார். பிராமணரல்லாதோர். தமிழர் போன்ற பொது அடையாளங்களை காட்டும் வரலாற்றில் இவ்வாறு சிதைந்த வரலாறு அதிகம். இதற்கு மறுதலையாக ராமதாஸ் தலித் தலைவர்களோடு பூண்ட உறவுகுறித்த நோக்கத்தினையும் டி.எம்.மணி குறிப்பிடுகிறார். எல். இளையபெருமாளின் எதிர்ப்பை சரிக்கட்டும் நோக்கிலேயே அவர் தென் மாவட்டங்களில் செயற் பட்டுக் கொண்டிருநத திருமாவளவன், பசுபதி பாண்டியன் போன்றோரை வடக்கே அழைத்தார். ராமதாஸின் அரசியல் நோக்கத்திற்கு தடையாயிருந்த தலித்துகளும் தாங்கள் எதிரியில்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக, தன் பிடிக்கு உட்படும் தலித் தலைவர்களை ஆதரிப்பது அவரின் நடவடிக்கையில் இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.
     ராமதாஸின் நடவடிக்கைகளை கவனித்துவரும் யாரும் இதை பொய் என்று சொல்ல மாட்டார்கள். தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் திருமாவளவனோடு இணைந்து பணியாற்றிய போதும் சாதிஒழிப்பு சார்ந்த தளங்களில் இந்த ஒற்றுமையை விரிவுபடுத்திக் கொள்ளவில்லை என்பது இளையபெருமாள் ராமதாஸோடு 1991 இல் சமாதான உடன்பாட்டை மேற்கொண்டபோது இழிதொழில்களை வலியுறுத்தக் கூடாது என்பதை உடன்பாட்டின் மைய நோக்காக்கி யிருந்தார். உடன்பாடு அப்படியே நின்றுபோனது இளையபெருமாளும் ஏமாற்றப் பட்டார் என்பதே அனுபவம்.
     இந்நூல்கள் தரும் தலித்மக்களின் போராட்ட உணர்வுகுறித்த பதிவுகள் இதுவரை தமிழில் சொல்லப்டாதவையாகும். தற்சார்பற்ற வாழ்நிலை, மறுக்கப்பட்ட கல்வியால் நிலைபெறும் அறியாமை போன்றவற்றால் குறுகிக் கிடந்த அம்மக்களிடம் இயல்பாக உள்ள எதிர்ப்புணர்வு, துணிச்சல், இயக்கம் ஒன்றின் பின்னணியோடு வலுப்பெறும் எழுச்சி, இழப்புகளைத் தாண்டி உடனடியாக மறுவாழ்வை நிர்மாணிக்கம் திண்மை என்று நகருகிறது. இப்பிரதிகள் இயக்கம் உருவானபின் இந்துக்களின் வீடுகளில் சோறெடுத்தல், பண்டிகை பலகாரங்கள் வாங்குதல், கோயில் விழாக்களில் கஞ்சி வாங்குதல் போன்றன நிறுத்தப்படுகின்றன.
     நிலங்களை உரிமையாக்குதல், மடத்துக்கு சொந்தமான குளத்தில் நீரெடுத்தல் என்று போராட்டங்கள் விரிவாயின. மடத்திற்கு சொந்தமான குளத்தில் நீரெடுக்கும் போராட்டம் நடந்தபோது தலித்துகளுக்கு எதிராக நில ஆதிக்கம் கொண்டிருந்த வெள்ளாளர்களுக்கு ஆதராவான பிற்பட்ட வகுப்பினர் கலவரத்தில் இறங்கினர். இருந்தும் தோல்வியைப்பற்றி நினையாமல் அம்மக்கள் போராடினர். அம்மோதலின் ரவுடிப் பட்டியலில் இருந்த ராஜேந்திரன் என்பவர் இறந்துபோனார். ஏற்கனவே தாக்கப்பட்டு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டிருந்த தலித் தரப்பு மோகன் என்பவரை ஆத்திரத்தினால் ஆதிக்க வகுப்பினர் கொன்று விடக்கூடும் என்று மனம் வருந்தி நின்றபோது உடல் முழுவதும் வியர்த்தவாறு 4 இளைஞர்கள் ஓடிவருகிறார்கள்.
     ராஜேந்திரன் கொலையானதும் ஆதிக்க வகுப்பினர் சிதறி ஓடிய தருணத்தில் மருத்துவமனையிலிருந்த மோகனை தூக்கிக் கொண்டு பின்புறச் சுவற்றில் ஏறிக்குதித்து மறைவான இடத்தில் வைத்து விட்டு அந்நால்வரும் வருகிறார்கள். இச்சம்பவத்தை எழுதும் டி.எம்.மணி "எப்படி இவ்வளவு தைரியமாக இவர்களால் சாதிக்க முடிந்தது?" என்று வியக்கிறார். சாதி, சாதியின் செயற்பாடு போன்றவற்றை அனுபவிக்கும் இம்மக்களிடம் அத்தளத்தில் ஒன்று நடந்தால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகித்துக் கொள்ள முடிகிறது டி.எம்.மணி அரசு அலுவலர் ஒருவரை சந்திக்க செல்லுகிறாரென்றால் அக்குறிப்பிட்ட அலுவலர் தங்களிடம் என்னவெல்லாம் சொல்லுவார் என்று தங்கள் தோழர்களிடம் சொல்லிச் செல்லுவாராம். அவர் சொல்லிச் சென்றது போலவே அலுவலர் பேசுவாராம்.
     இச்செய்தியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் நேர்பேச்சில் குறிப்பிட்டார். இது எப்படி சாத்தியம்? சாதிரீதியான அணுகு முறையில் சாதி இந்துக்களும், அதிகாரிகளும் வழமையாய் சொல்லும் காரணம் ஒரே மாதிரி இருப்பதும், வாக்குறுதிகளின் ஏமாற்றம் போன்றவற்றை சந்தித்துப் பழகிப்போன இம்மக்களுக்கு சூழலை வாசிப்பது எளிமையாகிவிடுகிறது. அதற்கு எண்ணும் எழுத்தும் கற்க தேவையில்லை.
     காவற்கூடம் என்னும் ஊரில் செத்த மாட்டை அப்புறப்படுத்த வெட்டியான் வரவில்லை என்பதற்காக வெட்டியான் குடிசைகளை ஆதிக்கவகுப்பினர் கொளுத்தினர். இதனை காவல்துறையில் புகார் செய்த 'குற்றத்திற்காக' அவ்வூரைச் சேர்ந்த 40 சேரிக் குடிசைகளை எரித்தனர். கட்சி பிரமுகர்கள். காவல்துறை, தாசில்தார், துணை கலெக்டர் போன்றோர் எரிக்கப் பட்ட குடிசைகளை கணக்கில் கொள்ளாமல் சாதி இந்துக்களுக்கு ஆதரவாக பேசினாலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கலெக்டர் 'கங்கப்பா' என்பவரின் வழிகாட்டுதலோடு இந்துக்களின் தெருவழியே போகாத வண்ணம் முற்றிலும் புதிய இடத்தில் வீடு கட்ட இடத்தை வழங்கியபோது 52 குடிசைகளையும் உற்சாகத்தோடு கட்டிகொண்டனர். இழப்புதரும் வலியிலிருந்து மாறி மற்றுமொரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கின்றனர். குடிசைகள் கட்டப்பட்ட பகுதிக்கு நன்றியோடு கங்கப்பா நகர் என்று பெயரும் சூட்டிக்கொண்டனர் அம்மக்கள்.
     போராட்டக் களங்களில் ஏற்படும் ஏமாற்றங்கள், கிராம அமைப்பொன்று சாதியை தக்கவைத்துக் கொள்ளும் சாதுர்யம் அசாதாரண சூழலில் பரப்பப்படும் சொல்லாடல்கள் குறித்த புரிதல் போன்றவை தலித்மக்களுக்கு அத்துப்படி. காவற்கூடம் கிராமங்களில் நடத்தப்பட்ட வன்முறையை எழுதத் தொடங்கும் டி.எம். மணி "முதல் நாள் செய்தித்தாளில் கோஷ்டி மோதல், தீவைப்பு என்ற தலைப்பில் செய்தி வெளியானது. பெரும்பாலும் கோஷ்டி தலித்துகளாகவும், அது பாதிக்கப்பட்ட தரப்பினராகவும் இருப்பர் என்பது தலித்துகளுக்கு பரிந்து பேசுபவராக வந்து தலித் இளைஞர் ஒருவரின் நடத்தை 'மீறலால்' மோதல் எழுந்தது என்றும் அரிஜனங்களே தங்களின் சில குடிசைகளுக்கு தீவைத்துக் கொண்டனர் என்றும் சொல்லுவதோடு சமாதானமாக போய்விடலாம் என்று சொல்ல தலித்துகளுக்கென சில உதவிகளையும் செய்ய முன் வருகிறார். ஆனால் தலத்துகள் தாங்களே தீவைத்துக் கொண்டதாக புகார் கூறியவர்களிடம் தீப்பெட்டியைக் கொடுக்கும் கலெக்டர் கங்கப்பா, "எங்கே உன்குடிசையை நீயே கொளுத்திக்கொள் பார்ப்போம்" என்று சொன்னபோது அவர்கள் பின்வாங்கினர். இந்த இடத்தில் கலெக்டர் கங்கப்பா தலித்வகுப்பினர் என்பதையும் ராமகிருஷ்ணன் வன்னியர் என்பதையும் டி.எம்.மணி குறிப்பிடுகிறார்.
     வேறுசில இடங்களில் தலித் அதிகாரியாக இருப்பதாலேயே தலித் ஆதரவு முத்திரையால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சும் அதிகாரிகளைக் குறிப்பிடும்போது அவர்களின் சூழலை யோசித்துப் பார்க்கும் போக்கும் இவர்களிடம் வெளிப்படுகிறது. இந்த சூழல் குறித்து வேறொரு இடத்தில் எழுதும் டி.எம்.மணி "தலித்துகள் தாக்கப்படும் போதும், கொடுமைக்குள்ளாகும் போதும் அனுதாபப்படுவதற்கும் ஆதரவுக்குரல் கொடுப்பதற்கும் மற்ற சாதியில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் தலித்துகள் எதிர்தாக்குதல் நடத்துவதை அவர்கள் விரும்புவதில்லை" என்பதை நெடிய அனுபவத்திலிருந்து சொல்லுகிறார்.
     கிராமங்களின் ஒற்றுமை என்பது அந்தந்த சாதிக் கடமையை அவரவர் செய்யவேண்டும் என்பதே போன்றவற்றை துல்லியமாக சொல்லும் சாதிகளின் சாதியச் செயற்பாடுகளை குறைத்துவிடாமலும், மிகைப்படாமலும் எழுதுகிறார். பிராமணர் எதிர்ப்பு அவருக்கிருந்தாலும் பிராமணர் அல்லாத சாதிகளன தலித்வெறுப்பை குறைத்து மதிப்பிடவோ, அதன் மூலம் சாதிய பலன்களிலிருந்து அவர்களை தப்பவைக்கவோ அவர் முயற்சிக்க வில்லை.
     கொலை வழக்கு, சிறை என்று பயணித்த டி.எம்.மணி குறைவான எண்ணிக்கையினரோடு இசுலாம் தழுவி இன்று உமர் ஃபாரூக் ஆகி விட்டார். அதற்கான காரணம். மதம் தழுவியவர்களின் படங்கள் என்று சாதி ஒழிந்தது நூலின் இறுதியையும்,'தமிழ் தேசியத்தால்' உள்வாங்கப்பட்ட இன்றைய தலித் அரசியலை குறித்து செந்தமிழ் நாட்டுச் சேரிகள் நூலின் இறுதியையும் எழுதியுள்ளார். இந்நூல்களை வாசித்து முடிக்கிற போது பெரும் துயரமும், ஆற்றாமையும் நம்மை சூழ்ந்துக் கொள்கிறது. நூலின் இறுதிப்பகுதியில் அவர் முன்னெடுக்கும் விவாதத்தில் யாரும் உடன்படவோ, மாறுபடவோ செய்யலாம். ஆனால் அவர் முன்வைக்கும் அனுபவத்தை யாரும் அத்துணை எளிமையாய் கடந்துவிட முடியாது.
     அங்கீகரிக்கப்படாத டி.எம்.மணி போன்றோரின் போராட்ட பலனால்தான் இன்றைய தலித் சமூகம், தலித் இயக்கங்களும் தங்களை ஆசுவாசப்படுத்தக் கொள்கின்றன. பெரும் இயக்கபலம் இல்லாவிட்டாலும் அவர் இன்றும் எழுதுகிறார், செயற்படுகிறார், ஏனெனில் அவர் பெற்றுக் கொண்டுள்ள கருத்தியல் தன்னளவில் விடுதலை பெற்றவராக அவரை உணரவைத்துள்ளது. தன்னளவில் விடுதலை பெறாத யாரும் எத்தகைய கூட்டத்தை திரட்டினாலும் யாரையும் விடுவிக்க முடியாது.

தன்னுடைய புகைப்படத்தை, சென்னை முழுக்க வரைந்துள்ள திருமாவளவன், அந்த பணத்தில் ஏழை தலித் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கலாம் ?


தன்னுடைய புகைப்படத்தை, சென்னை முழுக்க வரைந்துள்ள திருமாவளவன், அந்த பணத்தில் ஏழை தலித் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கலாம் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட ஆறாவது மாநாடு, அம்பத்தூரில் நடந்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார். அம்பத்தூர் நகர செயலர் மாரியப்பன் வரவேற்புரை ஆற்றினார்.

இதில், மாநில செயலர் தா.பாண்டியன் பேசியதாவது:இன்று அனைத்துக் கட்சிகளிலும், முதலாளித்துவம் பெருகி விட்டது. இதற்கு, எந்த திராவிட கட்சிகளும் விதிவிலக்கு இல்லை. சிறுத்தைகள் கட்சியினர் கூட, தமிழகம் முழுக்க ஆங்காங்கே, அவர்களுடைய தலைவர் திருமாவளவன் புகைப்படங்களை சுவரில் வரைந்துள்ளனர்.ஒரு விளம்பரத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய்:சென்னையின் பல்வேறு இடங்களில் இது மாதிரியான சுவர் விளம்பரங்களை, நாம் பார்க்க முடியும். சுவரில் விளம்பரங்கள் எழுதுகிறவர்களிடம், "அதற்கு எவ்வளவு செலவாகிறது?' என்று கேட்டேன். கிட்டத்தட்ட, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று சொன்னார்கள். அதை கேட்டு நான் பிரமித்து போய்விட்டேன். குறிப்பிட்ட பகுதிக்கு விளம்பரம் செய்ய இவ்வளவு ரூபாய் ஆகும் என்றால், தமிழகம் முழுக்க விளம்பரம் செய்ய, பல லட்ச ரூபாய் செலவாகும். அந்த பணத்தில், வறுமையில் வாடும், 100 தலித்துகளுக்கு, வீடு கட்டிக் கொடுத்திருக்கலாம். ஒரு முறை திருமாவளவனை நேரில் சந்தித்த போது, அதை அவரிடம் கூறினேன்.

அதற்கு அவர், "தொண்டர்களாகவே சுவர் விளம்பரம் செய்து கொள்கின்றனர்' என்றார். நம் கட்சியிலும், அது மாதிரியான செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
"நம் இயக்கத்திலும்முதலாளித்துவம்':ஒரு முறை, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் உறுப்பினருக்கு பாராட்டு கூட்டம் நடந்தது. அந்த பெண், அந்த கிராமத்தில் உள்ள சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்.

ஆனால், அவருடன் போட்டி போட்டு தோல்வி அடைந்தவர், பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்; பண பலமும் படைத்தவர். எனவே, "தேர்தலில் அதிக செலவு ஆனதா? என, அந்த பெண்ணிடம் கேட்டேன். "25 லட்ச ரூபாய் மட்டுமே செலவாகியது. ஆனால், தோல்வி அடைந்த அவருக்கு, 75 லட்ச ரூபாய் செலவாகியது' என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நமது இயக்கத்திலும், இது மாதிரியான முதலாளித்துவ போக்கு வளர்ந்து வருகிறது. பெரும் பணக்காரர்கள் வியக்கும் அளவில், கம்யூனிஸ்ட்களின் குடும்ப விழாக்கள் நடந்து வருகின்றன.அதை மாற்ற வேண்டும்.இவ்வாறு தா.பாண்டியன் பேசினார்.

சங்கரன் கோவி கலவரம் - நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

நெல்லை மாவட்டத்தில் (மேற்கு) சங்கரன்கோவில் கழுகுமலை ரோட்டில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். நட்புணர்வோடும், சுமூகமாகவும் வாழ்ந்து வரும் இவர்கள் மத்தியில் பகையை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சில சமூக விரோத விஷமிகள் சமீபகாலமாக பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.


அதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று (07.02.2012) தலித்கள் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் ஊர்வலம் கழுகுமலை ரோடு பள்ளிவாசல் அருகே வரும்போது ஊர்வலத்தில் இருந்த விஷமிகள் சிலர் பள்ளிவாசலின் உள்ளே செருப்புக்களை வீசியும், வெடிகளை வெடித்தும் பிரச்சனை செய்து விட்டு சென்றுள்ளனர். இதனைப் பார்த்த முஸ்ளிம்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். பிரச்சனையின் தீவிரத்தை உணராத காவல் துறையினரோ சில காவலர்களை மட்டும் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.

பின்னர் மீண்டும் அந்த பகுதிக்கு ஊர்வலத்தினர் வரும்போது பிரச்சனை செய்துள்ளனர். அதனை தடுக்க வந்த காவல்துறையினரையும் தாக்கிவிட்டு பிரச்சனையை தொடரவே இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் கலவரமாக மாறி இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் கூடி தாக்குதலில் ஈடுபட்டதோடு கண்ணில் பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி தீயும் வைத்துள்ளனர்.

சில மணி நேரம் நீடித்த கலவரம் எஸ்.பி தலைமையிலான போலீஸ் படை வந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசிய பின்பு கட்டுக்குள் வந்துள்ளது. கலவரத்தில் திட்டமிட்டே முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டு தீக்கரையாக்கப்பட்டுள்ளது. 

இதனை பார்க்கும் பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே ஒரு குழு செயல்பட்டுள்ளது தெளிவாகின்றது.

நெல்லை மாவட்டம் மேற்கு பகுதியில் கலவரத்தை ஏற்படுத்த ஃபாசிஸ்டுகள் அவ்வப்போது முயன்று வருவதும், கடந்த காலங்களில் தென்காசியில் முஸ்லிம்கள் போன்று போலி தாடி, தொப்பி வைத்து குண்டு வைத்து கலவரம் ஏற்படுத்த முயன்றதும் குறிப்பிடத்தக்கது.

எனவே தான் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் தலித் - முஸ்லிம்கள் மத்தியில் பகையை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனரோ என்ற சந்தேகம் வலுவாக ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மற்றும் காவல்துறை இது விஷயத்தில் அதீத சிரத்தை எடுத்து கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலை ஏ.எஸ் இஸ்மாயில் தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொண்டார்.

மேலும் தலித்கள் மற்றும் தலித் இளைஞர்கள் ஃபாசிஸ்டுகளின் வஞ்சக எண்ணத்திற்கு பலியாகி விடக்கூடாது  என்றும், இது விஷயத்தில் கவனம் செலுத்தி முஸ்லிம் - தலித் ஒற்றுமையை பலப்படுத்த முஸ்லிம் மற்றும் தலித் தலைவர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் கேட்டுக்கொண்டதுடன் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தகுந்த இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.