உடன்பிறந்த தங்கையை கொன்ற அண்ணன்: தலித் வாலிபரை மணந்ததால் வெறிச்செயல்

 புதன்கிழமை, 14 மார்ச் 2012, 12:19.12 PM GMT +05:30 ]
தலித் வாலிபரை மணந்ததால் உடன்பிறந்த தங்கையை கழுத்தை நெறித்து கொலை செய்த கொலைகார அண்ணனை பொலிஸார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஸ்ருதி, அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றினார்.
அவர் தலித் இனத்தை சேர்ந்த ஆசிரியர் சுதீப்குமாரை காதலித்தார். இதற்கு அவரது அண்ணன் மகாதேவா எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையும் மீறி ஸ்ருதி, சுதீப்குமாரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.
தனது எதிர்ப்பை மீறி ஸ்ருதி 'தலித்' ஆசிரியரை மணந்ததால் கோபம் கொண்ட மகாதேவா, அவர் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், தங்கை என்றும் பாராமல் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இதுபற்றி மைசூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அரசியல் களத்தை விரிவுப்படுதுகிறது ம.ம.க.தலித் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மாநில பதவி

சென்னை,மார்ச் 11 : சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் நம்பிக்கைக்குரிய அரசியல் கட்சியாக மனிதநேய மக்கள் கட்சியை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு புதிய செயல்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு தொடக்கமாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலப் பொறுப்புகளில் பலருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், இரண்டு துணைப் பொதுச் செயலாளர்கள், ஐந்து மாநில அமைப்புச் செயலாளர்கள், ஒரு தலைமை நிலையச் செயலாளர் என மமகவின் நிர்வாகப் பொறுப்புகள் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் இப்போது மாற்றம் செய்யப்பட்டிருக் கிறது. அதன்படி இரண்டு துணை பொதுச் செயலாளர்கள் என்பதற்கு பதிலாக ஒரு இணைப் பொதுச் செயலாளர், ஒரு துணைப் பொதுச் செயலாளர் என்று உயர்நிலைக் குழுவில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது மமகவின் தலைமை நிர்வாகக் குழுவினரின் எண்ணிக்கை 15 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மூன்று பதவிகள் பிற
சமூகத்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக இரண்டு மாநில அமைப்புச் செயலாளர்கள் பொறுப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி துணை பொதுச் செயலாளராக பணியாற்றிய எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் & இணைப் பொதுச் செயலாளராக பணிஉயர்வு பெற்றிருக்கிறார்.
கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக தலித் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் எம்.ஏ.,பி.எல்., நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தஞ்சை வடக்கு மாவட்ட மமக துணைச் செயலாளராக செயல்பட்டு வந்தார்.

புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டு மாநில அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக கிறித்தவ சமுதாயத்தைச் சேர்ந்த ஜோசப் நொலஸ்கோ பெரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை தூத்துக்குடி மாவட்ட மமக துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

இன்னொரு மாநில அமைப்புச் செயலாளர் பொறுப்புக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான பங்களிப்பு என்ற வகையில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த செல்லச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியின் பேச்சாளராக திருவாரூரில் பணியாற்றிவிட்டு தற்போது மதுரையில் முகாமிட்டுள்ளார்.

கட்சியின் மாநிலப் பொறுப்புகளில் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதன் மூலம் மனிதநேய மக்கள் கட்சியின் சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
இது தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும், பொதுமக்களிடையே புதிய நம்பிக்கைகளையும் உருவாக்கியுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணத்தைத் தொடங்கியிருப்பதாக பத்திரிகையாளர்களும், அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொ. செல்லச்சாமி (வயது 54)
முக்குலத்தோர் (மறவர்) இனத்தைச் சேர்ந்த செல்லச்சாமி விவசாயி ஆவார். 1967 முதல் அரசியல் தளத்தில் இயங்கிவரும் செல்லச்சாமி ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து பணியாற்றினார். 1993ல் வைகோ வெளியேற்றப்பட்ட போது மதிமுகவில் இணைந்த இவர், கருத்து வேறுபாட்டால் மதிமுகவில் இருந்து ஒதுங்கியிருந்த நேரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் அறிமுகம் கிடைத்தது.
மனிதநேய மக்கள் கட்சியின் திருவாரூர் மாநாட்டில் திரளான தொண்டர்களுடன் இணைந்தார். அது முதல் மமகவில் செயல்பட்டு வரும் செல்லச்சாமி கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு ஆதரவாக முக்குலத்து மக்களின் வாக்குகளைத் திரட்டியதில் பெரும் பங்காற்றியவர்.

வழக்கறிஞர் சரவணன் (வயது 33)
வழக்கறிஞர் சரவணன் எம்.ஏ.,பி.எல்., அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்துள்ளார். இவர் தொடக்கக் கல்வியில் இருந்து ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலில் பங்கெடுத்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன் இயங்கிய இஸ்லாமிய இயக்க மையத்தில் பங்கெடுத்துள்ளார். திருச்சி கத்தோலிக்க இளைஞர் திருச்சபையில் குஜராத் கலவரத்திற்கான கண்டனப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் மதுவிற்கு எதிரானப் போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மமகவின் சார்பில் சோழபுரம் பேரூராட்சி தனித் தொகுதியில் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இவரது உறவினரான டி.எம்.மணி இஸ்லாத்தை ஏற்று உமர் பாரூக்காக மாறி தஞ்சை பகுதியில் ஏராளமான மக்களை இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ளச் செய்தவர்.
சரவணன், சிறுபான்மை மற்றும் தலித் மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வருபவர்.

ஜோசப் நொலஸ்கோ பெரீஸ் (வயது49)
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த இவர் தூத்துக்குடி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராகப் பதவி வகித்தவர். சமூகநீதிப் பார்வையும், சிறுபான்மை மக்களின் உரிமை மீட்பில் மிகுந்த அக்கறையும் கொண்டவர்.
source from: www.mttexpress.com 

குடியரசு தினத்தில் முடியாதது மகளிர் தினத்தில் முடிந்தது

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே ஊராட்சி அலுவலகம் முன், குடியரசு தினத்தன்று, கொடியேற்ற முடியாமல் ஏமாற்றமடைந்த பெண் ஊராட்சித் தலைவர், மகளிர் தினமான நேற்று, வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில், தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று, அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும் தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. ஆனால், கறம்பக்குடி தாலுகா கரு.வடதெரு ஊராட்சி அலுவலகம் முன் கொடியேற்ற முயன்ற பெண் ஊராட்சித் தலைவர் கலைமணியை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தடுத்தனர். கலைமணி ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமுதாயத்தினர் தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுத்தனர் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கலாவதி, இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, மகளிர் தினமான நேற்று, ஊராட்சி அலுவலகம் முன் தேசியக் கொடி ஏற்றுவதென முடிவானது.
இதையொட்டி, நேற்று காலை 8 மணிக்கு , கரு.வடதெரு ஊராட்சி அலுவலகம் முன், போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில், ஊராட்சித் தலைவர் கலைமணி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.